![](pmdr0.gif)
கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி-1
kalveTTup pATalkaL manjari-1
verses from stone inscriptions
(in Unicode/UTF-8 format)
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Preparation, Etext-keying, Proof-reading, TSCII & UTF-8 Webversions
N D LogaSundaram & his sister Ms. N D Rani - Chennai
PDF version : Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This webpage presents the Etext in Tamil script-Unicode/UTF-8 format.
© Project Madurai 1998 - 2008
to preparation of electronic text of tamil literary works and to distribute them free on the Internet.
header part is kept intact
வாணகோவரையனான மகதைப் பெருமாள்
எனும் மகதநாட்டு குறுநிலத்தலைவன்
பொன்பரப்பினான் புகழ் பாடுவன.
திருஅண்ணாமலையார் கோயில் திருவுண்ணாழி
வடப்பக்கச் சுவரினில் பொளிக்கப்பட்டுள்ளவை.
1. நேரிசை வெண்பாக்கள்
தென்னிந்திய கல்வெட்டுத்தொகுதி, VIII, #97, (A.R. 97 of 1902)
தாரு முடியு முரசுந் தமக்குரிய பாரு முடன்பெறுவர் பார்வேந்தர - வீரப் பெருமாள் மகதேசன் பேரெழுதி தத்தம் திருமார்பில் ஆளோலை செய்து | 1 |
வன்மதுரை விட்டு வடகடலான் மால்வழுதி
தென்மதுரை பட்டின்று தென்கடலான் - நன்னுதலாய் மல்லார்தோள் மாகதகோ மான்முனிந்தால் மன்னவருக் கெல்லாங் கடலோ விடம் | 2 |
பாரோங்கு கொற்றக் குடைவாணன் பல்புரவித் தேரோன் திருவுத் திராடநாள் - பேருவமை குன்றெடா மாலியானைக் கோவேந்தர் வீற்றிருப்பர் இன்றொடான் இன்றோடான் என்று | 3 |
தென்னர் முதலா வுலகாண்ட செம்பொன்முடி மன்னர் பெருவாழ்வும் வாள்வலியு - மின்னு முருவத் திகிரி யுயர்நெடுந்தேர் வாணன் புருவக் கடைவளையப் போம் | 4 |
தீய்ந்து பொழிலாகா சிந்தி நகராகா தூர்ந்து மணிநீர்த் துறையாகா - ஏந்துமுலைப் பூணாகா மாரிவிழலாகா பொன்னெடுந்தேர் வாணாகா வென்னாதார் மன் | 5 |
பொருப்பிற் கரிய புகர்முகவெங் கூற்றின் மருப்பிற் துளைப்புண்ண வாரா - திருப்பில் வடியுளவாஞ் செல்வேல் மகதையர் கோமான் அடியுளவாம் வேந்தர்க் கரண் | 6 |
புரிந்த கனைகழற்காற் போர்வளவர் கோனை வரிந்த திறைக்காசு வாணா - தெரிந்தானை வாங்கினா யென்று வழுதியர்கள் தாங்கலங்கி யேங்கினார் பாரிழந்தோ மென்று | 7 |
மண்ணான் திகரிகை வாணன் வடுகெறிந்த எண்ணாயிரஞ் சூழ்ந்த எண்டிசையும் - புண்வார்ந்த நீரேநீர் காகநிழ லேநிழல்நெ டும்பெய்த தேரேதேர் செஞ்சேறே சேறு | 8 |
சூழும் பிணவணைமேல் தோய்முகிற் பந்தற்கீழ் வீழுங் கமுகினங்கள் மெய்காப்ப வாழுந்தன் தொன்னகரே போல் வடுகர் துஞ்சத் துயிற்றியதே மன்னவர்கோன் மாகதர்கோன் வாள் | 9 |
தேர்கொடி மாமறுகில் தெண்மணலைச் சேயிழையார் மார்க்கு மருந்தாக்க வல்லாவாம் - யார்க்கு முயிராய செங்கோ லுயர்நெடுந் தேர்வாணன் அயிரா வதத்தி னடி | 10 |
வேளை நெடுங்கல்லும் வெட்டும்வீ ரக்குகையு மூளை தெரிக்கு முடித்தலையு - நாளை மதிவா ணுதல் மடவாய் காணலாம் வாணன் அதிவாரணந் தொடர் விட்டால் | 11 |
மேருவின் மேல்வென்று கயல்பொறித்த வார்த்தையினும் வாரிபட வேலெறிந்த வார்த்தையிலும் - கார்விலங்கு முன்னிட்ட வார்த்தையிலுந் தென்னவர் மாகதற்குப் பின்னிட்ட வார்த்தை பொரிது | 12 |
2. ஆசிரிய விருத்தங்கள்
தென்னிந்திய கல்வெட்டுத்தொகுதி
VIII #97, பக். 50-51 (AR # 507 of 1902)
முன்போரு படைக்கடலை விட்டரச ரானார் மூலதன மும்பரியு முறைமுறைபரி வாரித் தென்பகை யடக்கியபின் வாணகுல தீபன் செய்ததனி யாண்மைவட திக்கிலறி கிற்பீர் பின்பொரு பொருப்பரண் விடாமலைய மானைப் போரெயி லில்பொருத போதொருபெ ரும்போர் வன்பறை தவிர்த் தொருகுதிரை வலியா லவனை வாட்டுறை தவிர்த்ததொரு கோலின்வலி யாலே | 13 |
வாரொன்று முலையாய்மற் றவறென்றும் பழுதுரையார் மகதைவேந்தன் போரொன்று புரியாமுன் பெரியகுறிச் சியிலெழுந்த புகையேகண்டாய் காரொன்று கனலெரியை மின்னென்று தளரேல் காரைக்காட்டி லூரொன்று மதில்வீழ்ந்த பேரொலியு முருமதிர்வ தொக்குங்காணே | 14 |
மடலளவு நிறைந்தொழுகு மதுமலர்த்தாள் மகதேசன் வையம்காக்கும் அடலளவி லணிநெடுந்தேர் ஆயு_ரமனை வணங்கா வரசராவர் கடலளவு நடந்தவன் கணைகுரக்கு மவன்தன் கதிர்வேல்மன்ன ருடலளவு நடந்ததுமற் றுலகளவு நடந்ததவன் ஒருசெங்கோலே | 15 |
சொல்லி விடுசெரு மீனவர்சூழும் உரிமைகொ டாழ்கடல் எல்லி விடுபடு ஏறுவ ரேனும் யமபுரி ஏறுவர் கொல்லி விடுமுர காதிபர் கூளி கருதலர் ஊர்புக வல்லி விடுமயி ராவதம் வாணன் வரவிடு நாளையே | 16 |
ஆழந் தருகடல் வையத் தரசு செலுத்திய செங்கோ லரசெல்லாம் வேழந் தருகொடை வாண திவாகரன் விதிமுறை செய்வது மெய்கண்டீ ரீழந் திரையிடு மாணிக் கப்படி யடுமின் தென்னரீ ரிடீராகிற் சோழந் திரையிடும் யானைக் குங்களை யிடுமென் றிருமிது சொன்னோமே | 17 |
3. கட்டளைக் கலித்துறைகள்
தென்னிந்திய கல்வெட்டுத்தொகுதி VIII #97, பக். 50.
முருகுந்து காஞ்சியும் வஞ்சியும் கொண்டமொய்த் தார்மகதன் திருகுங் கனைகழல்வீக் கியநாள்சீ பராந்தகனிற் பெருகுங் குருதிப் புனல்வாய் தொறும்பில வாய்மடுத்துப் பருகுங் கழுதுடன் செம்மைகொண் டாற்கும் பனிக்கடலே | 18 |
மட்டியன் றேறிய தார்புனை வாண புரந்தரன்நீ வெட்டியன் றேகொன்ற வெண்மணிப் பாடி யுதிரவெள்ளத் தொட்டியென் றேனுந் தொலைவதுண் டேதொலை யாதபந்தி கட்டியன் றேதெவ்வர் பாய்பரித் தானை கலக்குவதே | 19 |
கொங்குங் கலிங்கமுங் கொண்டகண்டா கொடித் தேருதியர் தங்கும் பதிகொண்ட வாணாதி பாதணி யாத தென்கொல் பொங்குஞ் சினப்படை வங்கார தொங்கன் புரண்டுவிழச் செங்குன்ற மென்று பிணக்குன்ற மாக்கிய தேர்மன்னனே | 20 |
எண்மேல் மிகும்பரித் தேர்மக தேசன் இகல்விசையப் பெண்மேல் விரும்பிவெம் போர்செய்த நாள்பின் கொடாவடுகர் விண்மேல் நடந்து வடுகென்ற நாமம் விலக்குண்டபின் மண்மேல் நடந்து தேசிமுன்னான வடுகென்றுமே | 21 |
நாமா னரவிந்த மான்விந்த மான்முடி நாகர்சென்னிப் பூமான் விரும்பும் புகழ்மக தேசற்குப் போர்வழுதி வாமான திரையிட்ட வந்நாள் தொடங்கியவ் வானவர்தம் கோமான் தனதென் றிரான்அம ராவதிக் குஞ்சரமே | 22 |
முற்றிற்று
மகதை, மகதநாடு என்பதன் மரூஉ. இது வடபுலத்திலுள்ள
மகத தேசம் அல்ல. தமிழ்நாட்டிலேயே மேற்கே சேர்வராயன்
தெற்கில் கொல்லி வடக்கில் சவ்வாது எனும் மலைகளிடைப்பட்டு
செங்கம் கணவாய் வழியாக திருவண்ணாமலை மற்றும் அதன்
கிழக்கில் அமைந்துள்ள பெண்ணையாறு பாயும் நிலப்பரப்பினை
சார்ந்துள்ள நாட்டினைக்குறிக்கும். மலைபடுகடாமில் பாட்டுடைத்
தலைவனாக பாடப்பட்ட நன்னன் சேய் நன்னன் தன் நாட்டினை
சூழ்ந்துள்ள பகுதியுமாகும். வாணர்குலத் தவைர்கள் இப்பகுதியை
சிலகாலம் ஆண்டுள்ளனர். இவர் நீண்ட தனி அரசமரபுடையோர்
இல்லை எனினும் இடையிடையே பற்பலகாலங்களில் பெருமன்னர்
களுக்கு கீழிருந்து படைத்தலைவர்களாகவும், தனியாட்சி பெற்ற
குறுநில மன்னர்களாகவும் திகழ்ந்துள்ளர்.
நூ. த. லோகசுந்தரமுதலி
This file was last updated on 29 August 2008.
.